
நட்பு, நண்பர்கள்...
தோழமை, தோழர்கள்...
சிநேகிதம், சிநேகிதர்கள்...
எனக்கு நட்பு, தோழமை, சிநேகிதம் பிடிக்கும்...!!!
அலுவல் தந்த அசதி, நிறைவான தூக்கம் வேண்டி தூங்க சென்றேன்... புரண்டு படுத்தேன்... மறுநாள் அலுவலக பணிகள் என் கண் முன்...
காலைப் பொழுது தன்னுள் பல பொக்கிஷங்களை, சுவாரசியங்களை, எதிர்ப்பார்ப்புகளை, இன்பங்களை, துன்பங்களை, அடக்கிக் கொண்டு இனிதாய் மலர, அலுவலகம் செல்ல வேண்டும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், மின் அஞ்சல் அனுப்ப வேண்டும், என்கிற இயந்திரத்தனமான எண்ணங்களோடு கண்கள் விழிக்க...
கைப்பேசி தன் பணியை தொடங்கியது. சிணுங்கியது.
"டேய் கமல், ஈவ்னிங் 6 மணிக்கு பெசன்ட் நகர் பீச் வாடா , நம்ம பிரிஎண்ட்ஸ் எல்லோரும் வாராங்க " என்றாள் மிக உரிமையோடும், அன்போடும், புத்துணர்ச்சியோடும் என் தோழி.
நான்: " ஏன்? என்ன விஷேசம்? "
இடைமறித்து அவள் : " வாடா, காரணம் சொன்னால்தான் வருவியா!?. கரெக்டா, கவனமா வந்து சேரு".
அவள் கூறிய விதம், உரிமை கொண்ட விதம், அன்பு கொண்ட விதம், என் தாயை நினைவுப் படுத்தியது.
அவளுடய புத்துணர்ச்சி என்னையும் தொற்றிக்கொள்ள, வழக்கம் போல் இல்லாமல், என் ரயில் பயணம் ரசிப்புத்தன்மையுடன் அமைந்தது.
கைக்குழந்தையின் புன்சிரிப்பு, உடல் ஊனமுற்றவரின் தன்னம்பிக்கை, கல்லூரி மாணவர்களின் கிண்டல் பேச்சுக்கள், வேலை இல்லா பட்டதாரியின் எதிர்பார்ப்பு அனைத்தும், என்னை உற்சாகப்படுத்தியது. மிக சீக்கிரமாக அலுவலகம் சென்று அடைந்தேன்.
என் அலுவல்களை செய்ய முற்பட்டேன், என்னுடைய உற்சாகம் என் அலுவலக நண்பர்களையும் தொற்றிக்கொள்ள வேலைகள் அனைத்தும் கொண்டாட்டமாக மாறியது. எல்லாம் நட்பு, நண்பர்களால் விளைந்த செயல்.
மாலை 6 மணி, பெசன்ட் நகர் பீச், நண்பர்கள் அனைவரும் சங்கமிக்க, நட்பு மிளிர, சூரியன் பின் வாங்கியது.
கடல் அலை ஆர்பரித்தது, எங்கள் நட்பு கூட்டணியுடன் போட்டியிட்டது. பாவம், முடியாமல் கடல் அலையும் பின் வாங்கியது.
அனைவரும், ஓர் உணவகத்தில் வட்டமாக அமர்ந்து இரவு உணவை சாப்பிட ஆரம்பித்தோம். நட்பு எவ்வித தடைகளையும், ஆச்சாரங்களையும் பார்ப்பதில்லை. ஒருவர், மற்ற நண்பர்களின் எச்சில் தட்டுகளில் இருந்த உணவை மிக உரிமையோடு எடுத்து உட்கொண்டோம்.
எனக்கு என் பள்ளிகூட, கல்லூரி வாழ்க்கை நினைவில் தோன்றியது.
பேரூந்தில் அணைத்து நண்பர்களும் சேர்ந்து அமர, நானும் என்னுடைய மற்றொரு தோழியும் உட்கார இடம் தேடிப் பார்க்க...
அப்போது, எங்கள் சமவயதொத்த ஒருவன் எங்களுக்கு இடம் அளித்தான். அவன், எங்கள் நட்பை புரிந்து கொண்ட விதம், மதித்த விதம், எனக்கு மகிழ்ச்சி அளித்தது. மேலும், எங்களின் செயல் அவனது நண்பர்களை நினைவூட்டியது போலும், அவனது கண்களில் உள்ள ஏக்கம் அதைப் பறைசாற்றியது.
வீடு வந்து சேர்தேன், அலுவல் தந்த அசதி, நண்பர்கள் தந்த அளவற்ற மகிழ்ச்சி, மனதை மென்மையாக்கிருந்தது.
மன மகிழ்ச்சியோடும், நிறைவுடனும், நிறைவான தூக்கம் வேண்டி, தூங்க சென்றேன்... தூங்கினனேன். தூங்கிக் கொண்டிருகிறேன்........நட்புடன்!!!
No comments:
Post a Comment